amma unavagam in punjab

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய “அம்மா உணவகம்” திட்டத்தை பல மாநிலங்கள் முன்னோடித் திட்டமாக எடுத்து செயல்படுத்தி வருகின்றன. இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல என்று பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் “அம்மா உணவகத்தை” காப்பி அடிக்க உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த மாநில முதல்வர் அமரிந்தர்சிங், தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், மக்களுக்கு சலுகை விலையில் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளார். தேர்தலில் இந்த திட்டத்தை செயல்படுத்த வாக்குறுதி அளித்திருந்ததையடுத்து, அமரிந்தர்சிங் அதை தீவிரப்படுத்தி வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் போது, ரூ.5-க்கு மதிய உணவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. ஆனால், விலைவாசி நிலையைப் பார்த்தும், அரசு கடனில் தத்தளி்க்கும் சூழலை அறிந்தும், மதியஉணவை ரூ.13-க்கு தர முடிவு செய்துள்ளது.

பஞ்சாபில் நடந்த முதல் சட்டசபைக் கூட்டத்திலும் கூட இந்த உணவகம் குறித்து முதல்வர் அமரிந்தர் சிங் எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. ஏனென்றால், உணவின் தரம் அதிகமாகவும், விலை மலிவாகவும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதால் பல்வேறு கட்டங்களாக அவர் ஆலோசனை நடத்தி வந்ததால், அது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

ஆனால், ஜூன்மாதம் தாக்கலாகும் காங்கிரஸ் அரசின் முதல்பட்ஜெட்டில் நிச்சயம் தமிழகத்தின் அம்மா உணவகம் போல் உணவகம் குறித்த அறிவிப்பு இருக்கும் அதில் சந்தேகமில்லை என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கான பெயர் குறித்து அமைச்சரவைதான் முடிவு செய்யும்.

5 கோதுமை சப்பாத்திகள், காய்கறி சாலட், சிறிதளவு சாதம், பருப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து ரூ.13-க்கு வழங்கப்படலாம். சன்டிகர் அரசில் இதுபோன்ற சலுகை உணவு ரூ.10க்கு தரப்படுகிறது. நாங்கள் அரசுக்கு இழப்பு ஏற்படக்கூடாது, அதேசமயம், லாபமும் வேண்டாம் என்ற நோக்கில் ரூ.3 அதிகமாக ரூ.13-க்கு மதிய உணவு வழங்க இருக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவகத் திட்டம், பல்வேறு பெயர்களாக, உருவங்களாக பல்வேறு மாநிலங்களில் தடம் பதித்து வருகிறது. இந்த உலகைவிட்டு அவர் மறைந்தாலும், இதுபோன்ற மகத்தான திட்டம் அவரின் பெயரை மாநிலந்தோறும் சொல்லிக்கொண்டு இருக்கிறது.