"ஆடம்பரமின்றி எளிமையாக பதவியேற்பேன்" - அமரிந்தர் சிங் அதிரடி
மாநிலத்தின் நிதி நிலை எனக்கு தெரியும், அதனால், ஆடம்பரம் இன்றி, தேவையற்ற செலவுகள் இன்றி எளிமையாக முதல்வர் பதவி ஏற்பேன் என்று காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்.வெற்றி
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 177 தொகுதிகளில் 77 தொகுதிகளைக் கைபற்றி, காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கேப்டன்அமரிந்தர்சிங் முதல்வராக நாளை பொறுப்பு ஏற்க உள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
எளிமையாக பதவி ஏற்பு
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் வி.பி.சிங் பட்நூர், முதல்வராக கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அப்போது நடைபெறும் விழாவில் எந்தவிதமான ஆடம்பரங்கள், தேவையற்ற செலவுகளும் செய்யப்படாது. பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறும். அவருடன் சேர்ந்து சில அமைச்சர்களும் சிலர் பதவி ஏற்க உள்ளனர்.
அரசுக்கு பொறுப்பு
அமரிந்தர்சிங்குக்கு மாநிலத்தின் நிதி நிலை குறித்து நன்கு தெரியும். ஆதலால், அவர் தேவையில்லாத, வீணாக செலவு செய்வதை பதவி ஏற்பு விழாவில் தவிர்த்துவிட்டார். நிதிச்சிக்கலில் இருந்து மாநிலத்தை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு சேமிப்பும், மாநிலத்தை நிதிச்சிக்கலில் இருந்து மீட்கும்.
மக்களை தொந்தரவு செய்யாதீர்கள்
இந்த பதவி ஏற்பு விழாவுக்கு வரும் புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனிப்பட்ட அழைப்பிதழ்களை உடன் கொண்டுவரவும் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கா வகையில், போக்குவரத்தை முடக்கும் வகையில் சாலைகளில் கார்களை நிறுத்தக்கூடாது.
நன்றி
இந்த தேர்தலில், தெளிவான முடிவு எடுத்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்வராக பதவி ஏற்றபின் அமரிந்தர் சிங் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து, தனது நன்றியை மக்களுக்கு தெரிவிப்பார். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுப்பாதைக்கும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.