விமான நிலைய பார்க்கிங் கட்டணம் : இனி ஆன்லைன் மூலம் வசூல்!
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலைய கார்கள் நிறுத்துமிடத்திற்கான பார்க்கிங் கட்டணம், இனிமேல் இ-பரிவர்த்தனை மூலம் வசூலிக்கப்படவுள்ளது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் திரு.நரேந்திரமோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டதால் சில்லறை தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்காக, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்தும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது.
அதன்படி, நேற்றுவரை விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதேவேளையில் அனைவரும் பணம் கையில் வைத்து புழங்காத வகையில் டிஜிட்டல் முறை எனப்படும் இ-பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
கட்டணத்திற்கான தொகையை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு, பேடிஎம், ப்ரீ ரீசார்ச் மற்றும் பல்வேறு வகையான டிஜிட்டல் பணமாற்றம் மூலம் கட்டலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில், இன்று முதல், இ-பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.