ahmednagar cop suspended for anti modi whatsapp post

காங்கிரஸின் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட்டின் ‘பாடி கார்ட்’ ஆக வேலை செய்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளத்தில் மிக மோசமாக சித்திரித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் சங்கம்நெரில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார் ரமேஷ் ஷிண்டே. இவர், பிரதமர் மோடியை ‘ஆட்சேபணைக்குரிய மொழியில்’ மிக மோசமாக விமர்சனம் செய்து, வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார். இதன் பேரில் அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் கூறினர். 

மாவட்ட போலீஸின் சைபர் பிரிவு, மிக விரிவாக விசாரணை மேற்கொண்டதை அடுத்து, ரமேஷ் ஷிண்டே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஹமத்நகர் எஸ்.பி., ரஞ்சன்குமார் சர்மா கூறியுள்ளார். 

வாட்ஸ்ஆப் போஸ்ட் தவிர, அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனவே, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டது என்று ரஞ்சன் குமார் சர்மா கூறினார். கடந்த வியாழன் அன்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். 

ஓர் அரசுப் பணியாளராக, அவரது நடத்தை மோசமாக இருந்துள்ளது. ஆட்சேபணைக்குரிய கருத்தை பகிர்ந்துள்ளார். அரசுப் பணியாளர்களுக்கு என்று சில வரன்முறைகள் உள்ளன. அவற்றை ஷிண்டே மீறிவிட்டார் என்று கூறினார் ரஞ்சன் குமார் சர்மா. 

ரமேஷ் ஷிண்டே முன்னதாக, முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா சாகேப்பின் பாதுகாவலராகப் பணியாற்றியுள்ளார். அண்மையில் அவர், பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்து, வாட்ஸ்ஆப்பில் தகவலை வெளியிட்டதுடன், பல குழுக்களுக்கு அதனை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு, வைரலாகப் பரவியது. இதுதான் ஷிண்டே மீதான விசாரணைகளுக்கு முக்கியமான காரணியாக இருந்திருக்கிறது.