கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-4’ ஏவுகணை வெற்றிகர சோதனை
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும், அதிநவீன அக்னி-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
4 ஆயிரம் கிலோ மீட்டர்
ஒடிசா மாநிலம், பாலாசூர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவீல்(வீலர் தீவு முந்தைய பெயர்) சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை, ஏறக்குறைய 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு சென்று எதிரி இலக்குகளை தாக்கும் தன்மை கொண்டது.
வெற்றிகரமாக
இந்த சோதனை குறித்து பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் கூறுகையில், “ உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, 4 ஆயிரம் கிலோமீட்டர் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஏவுகணை நேற்று காலை 11.55 மணிக்கு நகரும் ஏவுதளத்தில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
2 அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு துறையின் முக்கியமானதாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
6-வது சோதனை
20 மீட்டர்(65 அடிநீளம்) நீளம், 17 டன் எடையும் கொண்ட கொண்டது இந்த அக்னி-4 ரக ஏவுகணையாகும். அக்னி பிரிவில் இது 6-வது சோதனையாகும்.
அதிநவீன தொழில்நுட்பம்
இதற்கு முன் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி-4 ஏவுகணை அதிக அளவு நம்பிக்கைக்குரியதாகும். 5-வது தலைமுறைக்கான கணினி தொழில்நுட்பம், மற்றும் ஏவப்படும்போது குறுக்கீடுகள் வந்தால் தானாகவே பாதையை சரிசெய்து செல்லும் தொழில்நுட்பம் கொண்டதாகும்.
4 ஆயிரம் டிகிரி வெப்பம்
ஏவுகணையின் வௌிப்புறம் 4 ஆயிரம் டிகிரி வெப்பத்தையும், உள்புறம் மைனஸ் 50 டிகிரிக்கு குறைவான குளிரையும் தாங்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26-ந்தேதி, அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தொலைவும், அக்னி-2 2000கி.மீ தொலைவும், அக்னி-3 மற்றும் அக்னி-4 2,500 முதல் 3,500 கி.மீ தொலைவும் செல்லும் திறன் கொண்டது எனக் குறிப்பிடத்தக்கது.