சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம், பஸ் வசதி பெற்ற கிராமம்...
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்தேலி கிராமம் மக்களுக்கு பஸ் வசதியும், வீடுகளுக்கு மின் வசதியும் கிடைத்துள்ளது.
மஹாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்து இருப்பது, கட்சிரோலிமாவட்டம். இந்த மாவட்டத்தின் கடைக்கோரி கிராமம்தான் அம்தேலி. அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும் இந்த கிராமத்தில் 200 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இங்கிருக்கும் மக்கள் தெலுங்கு மொழியே பேசுகிறார்கள்.
இந்த கிராமத்துக்கு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், இன்னும் மின் வசதியும், பஸ் வசதியும் செய்து தரப்படவில்லை. அடர்ந்த காட்டுப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் இருப்பதால், அதிகாரிகளாகளாலும், அரசாலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே அம்தேலி கிராமம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 70 ஆண்டுகளுக்கு பின் இந்த கிராமத்துக்கு இப்போது மின்சார வசதியும், பஸ்வசதியும் எம்.எல்.ஏ. முயற்சியால் கிடைத்துள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜே அம்பிரிஷ்ராவ் அத்ரம் மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் கிராமத்துக்கு மின்வசதியும், பஸ்வசதியும் அளிக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, மஹாராஷ்டிரா மாநில மின் பகிர்மானம், பொதுப்பணித்துறை ஆகிய அதிகாரிகள் இணைந்து, பணிகளை தொடங்கினர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், அம்தேலிகிராமத்துக்கு இப்போது மின்வசதியும், பஸ் வசதியும் கிடைத்துள்ளது.
இந்த இரு வசதிகளையும் பா.ஜனதா எம்.எல்.ஏ. அத்ரம் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். கிராமத்துக்கு இயக்கப்படும் பஸ்சுக்கும், மின் வசதி வழங்கப்படும் மின்பகிர்மான மையத்துக்கும் முறைப்படி நேற்று முன் தினம் பூஜைகள் போடப்பட்ட பின் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. கிராமத்துக்கு இயக்கப்பட்ட பஸ்ஸில் எம்.எல்.ஏ. அத்ரம் பயணித்தார்.பஸ் போக்குவரத்துக்காக ஆற்றில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.