‘ஜகா வாங்கினார்’ பிரசாந்த் பூஷன் - ‘கடவுள் கிருஷ்ணர்’ குறித்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு
கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக் குரிய கருத்துக்களை டுவிட்டரில்வெளியிட்டதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவர் நேற்று மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தில் பெண்களை ஈவ் டிசிங் செய்பவர்களை பிடிக்க ‘ஆன்ட்டி ரோமியோ’ எனும் போலீஸ் படையை உருவாக்கினார். இந்த ‘ஆன்ட்டிரோமியோ’ படை பெண்களை கிண்டல் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், ஸ்வராஜ் இந்திய கட்சியின் தலைவருமான பிரசாந்த் பூஷன் ‘ஆன்ட்டி ரோமியோ’ திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில், “ பெண்களை ஈவ்டீசிங் செய்ததில் மிகவும் பிரதானமானவர் கடவுள்கிருஷ்ண்னர்தான். ரோமியோ என்பவர் ஒரு காதலிக்காக வாழ்ந்தவர்.
அப்படிப்பார்த்தால், ‘ஆன்ட்டி ரோமியோ’ படை என்பதற்கு பதிலாக, ‘ஆன்ட்டிகிருஷ்ணா’ என்று பெயர் வைக்க வேண்டும். அதற்கு உ.பி.முதல்வர்ஆதித்யநாத் தயாரா?’’ எனக் கேட்டு இருந்தார்.
கண்டனம்
இவரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரசாந்த் பூஷன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடவுள் கிருஷ்ணர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்பதை அறிந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மன்னிப்பு கோரி, டுவிட்டரில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்கினார்.
இது குறித்து பிரசாந்த பூஷன் வௌியிட்ட டுவிட்டர் கருத்தில் ,“ நான்டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களை உணர்ந்தேன்.
ரோமியோவும்,கிருஷ்ணரையும் ஒப்பிட்டு கூறியது முறையில்லாதது. இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் தெரிவிக்கவில்லை.
அப்படி நான் கூறிய கருத்துக்கள் பலபேரின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த வார்த்தைகளையும் டுவிட்டரில்இருந்து நீக்கிவிடுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே உத்தரப்பிரதேசம், பிரசோபாத் நகரில் உள்ள பஜ்ரங் தள் ஒருங்கிணைப்பாளர் அச்மான் உபாத்யாயா நேற்று விடுத்த அறிக்கையில், “பிரசாந்த் பூஷன் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும்’’ என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.