அதிமுக எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல்!!
புதுவைமாநிலம், முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கடந்த சிலநாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகவில்லை.
இதையடுத்து கடந்த 4ம் தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டாக்டர்கள், வையாபுரி மணிகண்டனின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ரத்த மாதிரியின் முடிவில், எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது ரத்த மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.