"கர்நாடகா 'காவி'யா மாறாது... இனி கலராவே இருக்கும்...!" யார் சொன்னது தெரியுமா?
கர்நாடகாவில், பாஜக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாகவே எடியூரப்பா பதவி விலகிய நிலையில், கர்நாடகா இனி காவி மயமாகாது என்றும் வண்ணமயமாக இருக்கும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்த நிலையில் பாஜகவுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை மஜத நாடியது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது.
தனக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதை உணர்ந்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மஜத தலைவர் குமாரசாமி விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகா இனி காவி மயமாகாது என்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கா்நாடகா இனி காவிமயமாகாது. ஆனால் வண்ணமயமாக இருக்கும். ஆட்டம் தொடங்கும் முன்பே முடிவடைந்து விட்டது. 55 மணி நேரம் கூட பா.ஜ.க.வால் தாக்குபிடிக்க முடியவில்லை. நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும் மாநிலத்தில் நடைபெறவுள்ள அரசியல் நகா்வுகளை கா்நாடகா மக்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். நான் தொடா்ந்து மக்கள் பக்கம் தான் இருப்பேன். கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.