இந்தியாவில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்தியா வந்துள்ள அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் சென்றுள்ளனர். கடந்த 1ஆம் தேதி அம்மாநிலத்தின் தும்கா மாவட்டத்துக்கு சென்ற அவர்கள், சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது, அவர்களது கூடாரத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, கணவரை கொடூரமாக தாக்கியதுடன், அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சுமார் 7 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜார்க்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி பட்ஜெட் 2024-25: 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000!

இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மான், “இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நொறுங்கி விட்டேன். நீங்கள் இருவரும் கோட்டயத்திற்கு வந்தபோது, அங்குள்ள என் நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்திருந்தனர். இதுபோன்ற சம்பவம் எங்கும் யாருக்கும் நடக்கக் கூடாது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?” என கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்மல்க பேசும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி பேசும் கலாச்சார பெருமையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.