"கணக்கு முக்கியம் அல்ல காரியம் தான் முக்கியம்" - மன்மோகன்சிங்கை கலாய்த்த அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடியை விட மன்மோகன்சிங்கே அதிக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தவர் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க.தலைமையிலான மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்திற்குச் சென்ற பா.ஜ.க.தேசியத் தலைவர் அமித்ஷா இக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை நமது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்சனையாக்கி வருகின்றன. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை விட மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறைவு தான்"
"பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால் எத்தனை நன்மைகள் என்பதை மட்டுமே நாம் கணக்கிட வேண்டுமே தவிர எத்தனை சுற்றுப்பயணங்கள் என்பதை கணக்கிடக் கூடாது." இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டார்.