முதல்முறையாக பெண் லைன் மேன் நியமனம்... ! போராடி சாதித்து காட்டிய இளம்பெண்...!
மின் இணைப்பை மின் கம்பத்தில் ஏறி சரி செய்யும் பணியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்
முதல் பெண் லைன் மேன்
ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளில் பெண்கள் போட்டி போட்டு பணியாற்றி வருகின்றனர். விமானம், ரயில் , பஸ் ஓட்டுவதில் தொடங்கி பல்வேறு துறையில் ஆண்களுக்கு இணையானவர்கள் தாங்கள் என நிருபித்து வருகின்றனர். அப்படி பட்ட நிகழ்வு தான் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் மின்பகிர்வு கூட்டுறவு நிறுவனத்தில் லைன் மேனாக 22 வயதான பப்புரி ஷிரிஷா சேர்ந்துள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். தெலுங்கானா மாநிலத்தில் ஜூனியர் லைன் மேன்களுக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஷிரிஷா பல முறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இதில் எந்த வித பதிலும் கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவின் படி லைன் மேனாக பெண்களுக்கும் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கனவு நினைவாகியுள்ளது
இதனையடுத்து நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட ஷிரிஷா வெற்றி பெற்று லைன் மேன் பணியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஷிரிஷா, தனது கனவு நினைவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்த பணியில் இன்னும் ஏராளமான பெண்கள் இணைவார்கள் என நம்புவதாக தெரிவித்த அவர்,இனி தங்களை லைன் வுமன் அழைக்கப்படுவோம் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார். சித்திப்பேட்டை செபர்த்தி என்ற குக்கிராமத்தில் தனது தாய் மாமா உதவியோடு மின் கம்பத்தில் ஏற பயிற்ச்சி பெற்ற ஷிரிஷா நகரத்தில் தனது பயணத்தை தொடங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். லைன் மேன். இந்தப் பணியின் பெயரே இது ஆண்களுக்கானதுதான். ஆனால், தெலங்கானவைச் சேர்ந்த இந்த பெண் இந்தப் பணியில் சேர்ந்து, பிறருக்கு முன்மாதிரி ஆகியுள்ளனர். மின் கம்பத்தில் மேலே ஏறுவது போல தனது வாழக்கையிலும் மேல் நோக்கி ஷிரிஷா முன்னேற வேண்டும் என சமுக தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்