மத்திய அரசுத் துறைகளில் 7 லட்சம் காலிப் பணியிடங்கள்… மத்திய அரசு அதிரடி தகவல் !!
கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு மத்திய அரசு துறைகளில் ஏழு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன என்று இன்று மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வேலையின்மை தலைவிரித்தாடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமர் மோடி ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக அறிவித்துவிட்டு அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை என குற்றறசாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் ,அடிப்படையில் குரூப் சி பிரிவில் அதிகபட்சமாக 6,83,823 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
குரூப் பி பிரிவில் 89 ஆயிரத்து 638 பணியிடங்களும், குரூப் ஏ பிரிவில் 19 ஆயிரத்து 896 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் 1 லட்சத்து 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை நடப்பு ஆண்டில் நடைபெற்று வருவதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோல முந்தைய 2 ஆண்டு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ள ஜிதேந்திரா சிங், மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.