பிரதமர் மோடி செல்லாது என அறிவித்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைக்கும் ?
நம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது எடுத்து கைநிறைய செலவு செய்ய போகிறோம்? என்பது தான் இப்போது மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த தகவல், சமீபத்தில் நாட்டின் கரன்சி அச்சடிக்கும் அச்சகங்கள் குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, புதிய ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்துக்கு வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
ஏன் 6 மாதங்கள் ஆகும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்...

இது குறித்து மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,
பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த போது, ரூ.2000 நோட்டுகள் போதுமான அளவு ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்தன.
ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் ஏதும் அச்சிடப்படவில்லை. நவம்பர் 10-ந்தேதியில் இருந்து தான் அச்சிடும்பணிகள் தொடங்கின
ஆனால், மக்களின் கைகளில் போதுமான பணம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு ஒரு அசட்டு துணிச்சலுடன் தெரிவித்தது.
நாட்டில் மொத்தமே 4 கரன்சி அச்சிடும் அச்சங்கங்களை வைத்துக்கொண்டு எப்படி 85 சதவீதம் புழக்கத்தில் உள்ள கரன்சி தேவையை உடனடியாக நிறைவேற்றப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனென்றால், நாட்டில் ஒட்டு மொத்தமாக புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு மட்டும் ரூ17.54 லட்சம் கோடி.
இதில் 45 சதவீதம் ரூ.500 நோட்டுகள், அதாவது, ரூ.7.89 லட்சம் கோடி.
39 சதவீதம் ரூ.1000 நோட்டுக்கள் அதாவது, ரூ.6.84 லட்சம் கோடி. இந்த கரன்சிகளை இப்போது அச்சடிப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.
நாசிக்(மஹாராஷ்டிரா), தேவாஸ்(மத்தியபிரதேசம்), சல்பானி(மேற்கு வங்காளம்), மைசூரு(கர்நாடகா) ஆகிய நான்கு இடங்களில் மட்டும் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சங்கள் மட்டுமே உள்ளன.

இதில், சல்பானி, மைசூரூ ஆகிய நகரங்களில் இருக்கும் கரன்சி அச்சடிக்கும் அச்சகங்கள் மத்தியஅரசுக்கு சொந்தமானவை. அதாவது, மத்திய அரசின் செக்கியூரிட்டி பிரின்டிங் அன்ட் மைனிங் கார்பரேஷன் ஆப் இந்தியாவுக்கு தொந்தமானவை.
இந்த அச்சகத்தில் மொத்த உற்பத்தி திறனில் 40 சதவீதம் மட்டும் ரூபாய் நோட்டுகள் ஒர் ஆண்டு முழுவதும் அச்சிட முடியும்.
2-வது நாசிக், தேவாஸ் இடங்களில் இருக்கும் கரன்சி அச்சடிக்கும் அச்சகங்கள் பாரத ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவைகளாகும். இந்த இரண்டும் ஆண்டுக்கு 60 சதவீதம் மட்டும் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வருகின்றன. இரு ஷிப்ட்களில் ஆண்டுக்கு 16 00 கோடி நோட்டுகள்(மதிப்பில் அல்ல எண்ணிக்கையில்) மட்டுமே அச்சிடப்படுகிறது.
ஆனால், இப்போது நாட்டுக்கு இப்போது ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக எண்ணிக்கையில் 2,666 கோடி தேவை.
தற்போதுள்ள நிலையில், கரன்சி அச்சகங்களை 2 ஷிப்ட்களில் இயக்கினால், தேவைான கரன்சிகளை மக்களுக்கு அளிக்க முடியாது. மாறாக, நாள்ஒன்றுக்கு 3 ஷிப்ட்களில் இயக்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தால் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி நோட்டுகளை அச்சடிக்க முடியும் , மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.
தற்போதுள்ள நிலையில், நாட்டு மக்களின் புழக்கத்துக்கு 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில் 1,578 கோடி தேவைப்படுகிறது.
1000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில், 684 கோடி தேவை.
ஆனால், ஆயிரம் ரூபாய் நோட்டு இப்போதுள்ள நிலையில் வெளிவராது. அதேசமயம், ரூ.1000 நோட்டு மத்திப்புக்கு அதிகமாக ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிக்கப்பட்டுவிட்டதால், அந்த எண்ணிக்கையில் பாதி இருந்தாலே போதுமானது.
அதாவது, எண்ணிக்கையில் 342 கோடியும், ரூ.2 ஆயிரம் நோட்டு மதிப்பில் ரூ.6.84 லட்சம் கோடி இருந்தால் போதுமானது.
செப்டம்பர் மாதத்துக்கு முன்பாகவே இந்த அச்சிடும் பணியைத் தொடங்கி இருந்தால், இப்போதுள்ள தேவையில், பாதியை நிறைவேற்றி இருக்கலாம்.
அதாவது, தற்போதுள்ள ஆயிரம் ரூபாய் மத்திப்புக்கு ஈடாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு இருக்க முடியும்.
இது இப்படியிருக்க ரூ.500 நோட்டு கடந்த 10 ந்தேதி தான் அச்சடிக்கும் பணி தொடங்கி இருக்கிறது. ஆனால், இன்னும் முழுமையாக ரூ.2000 நோட்டுக்கள் அடிக்கும் பணியும் முடியவில்லை.
ஆகவே, புதிய ரூ.500 நோட்டுக்களை முழுமையாக அடித்து மக்களிடம் புழக்கத்துக்கு கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.
ஏனென்றால் நாட்டில் தற்போது புழங்கிக் கொண்டு இருக்கும் ஒட்டுமொத்த கரன்சியில் 84 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள். அவை அனைத்தும் திரும்பப்பெறும் போது, அதற்கு ஈடான மதிப்பிலும், எண்ணிக்கையிலும் உடனடியாக ரூபாய் நோட்டுகளை அடித்து வெளியடுவது எளிதான காரியம் அல்ல.
மேலும், தற்போது நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் கைகளிலும் 20 சதவீதம் புழக்தத்தில் இருந்த ரூ.5, ரூ.10, ரூ.20 , ரூ.50, ரூ.100 நோட்டுக்கள் மட்டுமே முழுமையாக தற்போது, யன்பாட்டில் இருக்கின்றன.
எஞ்சிய ரூ.500, ரூ.2000 கரன்சிகள் முழுமையாக வர இன்னும் 6 மாதங்கள் அதாவது, அடுத்த நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் மாதத்தில்தான் சரளமாக மக்கள் கையில் பணம் புழங்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
அப்போ.... இன்னும் 6 மாத காலம், மக்கள் ஏ.டி.எம். வாசலிம், வங்கி வாசலிலும் நிற்க வேண்டுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். ....
