இந்தியாவில் 414 பேர் பலி..! 12 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் 2,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 187 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில் 295 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,578 பேரும் தமிழகத்தில் 1,242 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் அதன்பின் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கொரோனா தொற்றுக்கு இடமளிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது. எனினும் மக்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியும் பட்சத்தில் மீண்டும் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் மத வழிபாட்டுத்தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது என கூறியிருக்கும் மத்திய அரசு பொதுமக்கள் கூடும் விதமாக எந்தவொரு விழாக்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.