Asianet News TamilAsianet News Tamil

‘பல்க்’காக சென்னைக்கு வந்தது 300 கோடி – வங்கிகளுக்கு செல்லும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

300 crores-chennai-bulk
Author
First Published Nov 26, 2016, 9:42 AM IST


500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அறிவித்தது. இதையடுத்து, நாட்டில் கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

பணம் தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையை விடவும், குறைவான தொகையையே ரிசர்வ் வங்கி அனுப்புகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. மேலும் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில ஏடிஎம் மையங்களிலும் விரைவில் பணம் தீர்ந்து விடுகிறது. ஏடிஎம்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே கிடைப்பதால், சில்லறை கிடைக்காமல் மக்கள் அல்ல்ல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் முழுஅளவில் புழக்கத்துக்கு வரும் போது நிலைமை சீரடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த புதன்கிழமை முதல்முறையாக சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகமானது. சென்னை நகரில் நேற்று முன்தினம் புழக்கத்துக்கு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் சில ஏடிஎம்களில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாசிக்கில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 120 பெட்டிகள் 2 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த ரூபாய் நோட்டுகள் 14 டன் எடை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.300 கோடி மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போய்ச் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு குறையும். வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கில் இருந்து போதிய பணம் எடுக்க முடியும். மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றுவதற்கான ‘கெடு’ நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆனாலும் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். இதனால் சில வங்கிகளிலும், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் உள்ள ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

வங்கி கணக்கு இல்லாதவர்கள், தங்கள் கைவசம் உள்ள செல்லாத நோட்டுகளை கொண்டு புதிதாக கணக்கு தொடங்கினால் மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கணக்கு இல்லாத பலர் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியில் ரூ.2 ஆயிரம் வரை, பழைய ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் தேதியில் முதல் வங்கி ஊழியர்களின் வேலைப்பளுவும் அதிகரித்தது. அவர்களுக்கு கடந்த 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே இடையில் விடுமுறை கிடைத்தது.

இந்நிலையில் இன்று 4வது சனிக்கிழமை என்பதால், இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே இந்த 2 நாட்களும் வங்கிகளில் எந்த அலுவல்களும் நடைபெறாது. அடுத்து திங்கட்கிழமை தான் வங்கிகளில் பணப்பரிமாற்றம் நடைபெறும்.

ஆனாலும் இ-சேவை வசதி உள்ள ஏடிஎம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை இயந்திரங்களில் ‘டெபாசிட்’ செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் வரை ‘டெபாசிட்’ செய்ய முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios