கடந்த 8ம் தேதி இரவு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும் செலுத்தி, புதிய ரூபாய் பெறலாம் என அறிவிக்கபட்டது.
அதன்படி பொதுமக்கள் தங்கள் கைகளில் இருந்த செல்லாத பணத்தை தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் மாற்றியும் வந்தனர். இதற்கிடையே, நேற்று முன் தினம் முதல் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய மட்டுமே முடியும். மாற்ற முடியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால், மக்கள் ஏ.டி.எம் மையங்கள் மூலமாகவே தங்கள் பணத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல ஏ.டி.எம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று கடைசி நேரத்தில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். புதிய ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக கூறப்பட்டாலும், இன்னும் பல ஏ.டி.எம்களுக்கு வரவில்லை. ரூ.2 ஆயிரம் மட்டுமே வருவதால் சில்லறை பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு, முதல் முறையாக வங்கிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை வங்கிளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வங்கிகளுக்கு இன்றும் , நாளையும் விடுமுறை அளிக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஏடிஎம் மையங்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் குறைவாக உள்ள சூழலில் வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், பணம் மாற்றுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
