11 லட்சம் பான் எண்கள் ரத்து - மத்திய அரசு அதிரடி!!
மத்திய அரசு, பொதுமக்களின் வருமான கணக்கீட்டை துரிதமாக எடுத்து வருகிறது. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களை கண்டறிவதற்காக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்தது.
அதேபோல் ஆதார் எண்ணை ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்பட முக்கிய தேவைகளில் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருமான வரித்துறையினர் பான் கார்டு பெற்றவர்களை கணக்கெடுக்க தொடங்கியது. இதில், ஒரே நபர் பல்வேறு பான் கார்டுகள் பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையொட்டி, கடந்தத ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்தார்.
அப்போது, அவர் அளித்த பதிலில், ஒரே நபர் பல பான் எண்களை பெற்றுள்ளார். இதுபோன்ற பான் எண்கள் கண்டறியப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதி மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுவரை 1566 போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டதாகும் என தெரிவித்தார்.