ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11 லட்சம் பேரும், தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11 லட்சம் பேரும், தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2022 ஆம் ஆண்டுக்கான) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 861 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 11 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்தது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், புரசைவாக்கம், வில்லிவாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த தேர்வு நடந்தது.

காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் எளிதாக சென்று வரும் வகையில் தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.