இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்.. நண்பேன்டா.. பிரதமர் மோடி நன்றி!
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25% இலிருந்து 18% ஆக குறைக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு தானும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரியை 25% இலிருந்து 18% ஆக குறைப்பதாக அவர் கூறியுள்ளார்.
மோடி எனது சிறந்த நண்பர்
இது தொடர்பாக ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், ''இன்று காலை இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது ஒரு கௌரவம். அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், மேலும் அவரது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். வர்த்தகம், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது
ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இது உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், அங்கு ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.
பிரதமர் மோடியின் நட்பு மற்றும் மரியாதைக்காகவும், அவரது வேண்டுகோளின்படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பரஸ்பர வரி 25% இலிருந்து 18% ஆக குறைக்கும்
இதன் மூலம் அமெரிக்கா பரஸ்பர வரியை 25% இலிருந்து 18% ஆக குறைக்கும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அவர்கள் முன்வருவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி
டிரம்பின் வரி குறைப்பு அறிவிப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மோடி, ''எனது அன்பு நண்பர் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் இன்று பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி 18% ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 1.4 பில்லியன் இந்திய மக்கள் சார்பாக அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிரம்ப் தலைமை அவசியம்
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, பரஸ்பர ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப் அவர்களின் தலைமை மிக அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது. நமது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் நெருங்கி பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.