- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் விடாது வெளுக்கும் கனமழை! களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் விடாது வெளுக்கும் கனமழை! களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விடாமல் பெய்யும் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்திலும் கனமழை விடாமல் பெய்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
அப்போது அவர் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாக மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னையில் கூடுதல் கவனம்
மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் முதல்வர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மின் கம்பங்களை சீர் செய்திட நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் மழை தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திட வேண்டும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கண்துஞ்சாமல் மக்களை காப்போம்
பின்பு இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்'' என்று கூறியுள்ளார்.