- Home
- Tamil Nadu News
- பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
Vellore Murder Case: வேலூர் அருகே ராகவன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மாமனார் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பருடன் சேர்ந்து மருமகனை கொலை செய்த மாமனார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் ராகவன்(30). இவர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த சுவேதா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பிப்ரவரி 8ம் தேதி ராகவன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் மனைவி சுவேதா, அவரது தந்தை அமுல்ராஜ் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வேலை இல்லாத ராகவன் மது பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று சுவேதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். எனவே இது தொடர்பாக சுவேதாவின் தந்தை அமுல்ராஜ் பலமுறை ராகவனை அழைத்து பேசிய நிலையிலும் ராகவன் திருந்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் தனது குடும்ப நண்பரான பைனான்ஸ் தொழில் செய்து வரும் கார்த்திக்(29) என்பவரை வைத்து ராகவனை கொலை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கட்டையால் அடித்து அரிவாளால் வெட்டி ராகவனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

