- Home
- Tamil Nadu News
- ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடித்த தவெக-வினர்... விஜய் கட்சியினர் மீது போலீசார் தடியடி - கரூரில் பதற்றம்
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடித்த தவெக-வினர்... விஜய் கட்சியினர் மீது போலீசார் தடியடி - கரூரில் பதற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் பலர் பலியாகி உள்ள நிலையில், ஆம்புலன்ஸை தடுத்த தவெகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TVK Campaign Karur
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. நடிகர் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதனால் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கியதோடு, மயக்கமடைந்தவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு தன்னுடைய கட்சி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் தன்னுடைய பரப்புரையை வேகமாக முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் விஜய். அதன்பின் அந்த கூட்டத்தில் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 20ஐ கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. கரூர் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
போலீசார் தடியடி
கரூரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கரூருக்கு விரைவாக விரைந்து செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மறுபுறம் தவெகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. விஜய் பரப்புரை நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால், வேண்டுமென்றே வந்ததாக நினைத்து ஆம்புலன்ஸ் டிரைவரை தவெகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவெகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸை அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.