- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும். சென்னை, வேலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் தலைநகர் சென்னையில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
அதாவது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று வடதமிழக புதுச்சேரி கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை வடதமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று காலை மேலும் வலுவிழந்தது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென் மாவட்டங்களுக்கு மழை
அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் 6 முதல் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

