- Home
- Tamil Nadu News
- பிங்க் கலர் பேருந்தின் நிலைதான் திமுகவுக்கும்! போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி!
பிங்க் கலர் பேருந்தின் நிலைதான் திமுகவுக்கும்! போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி!
நாமக்கல் ராசிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது ஊழல், வரி உயர்வு, சுகாதாரத் துறை முறைகேடுகள், நீட் தேர்வு மற்றும் போதைப் பொருள் புழக்கம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுகவை போட்டுத் தாக்கிய இபிஎஸ்
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க.வினர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்தியாவையே தலைகுனிய வைத்துவிட்டனர். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.தான். இந்த விடியா ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.
பிங்க் கலர் பேருந்தின் நிலை
"மக்களைச் சந்திக்கும் எனது பேருந்து பயணத்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தூக்கம் போய்விட்டது" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். பிங்க் கலர் பேருந்துத் திட்டத்தைக் கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசுப் பேருந்துகளைப் பராமரித்து இயக்க வேண்டும் என்று கூறுகிறார். "பிங்க் கலர் பேருந்தின் நிலையில்தான் தி.மு.க.வின் நிலையும் உள்ளது" என்று அவர் விமர்சித்தார்.
பேருந்து கட்டணம் 67% உயர்வு
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பேருந்து கட்டணம் 67% உயர்த்தப்பட்டதாகவும், மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் குப்பைக் கட்டணம் எனப் பல வரிகளும் கடுமையாக உயர்த்தப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் முறைகேடுகள்
சுகாதாரத் துறையிலும் ஊழல் நடப்பதாகக் குற்றம் சாட்டிய பழனிசாமி, "அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 37 பெண்களே இதற்குச் சாட்சி. சிறுநீரகத் திருட்டு, கல்லீரல் திருட்டு போன்ற பல முறைகேடுகள் இந்த ஆட்சியில் நடந்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இவை குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
நீட் தேர்வு
கடந்த சட்டமன்றத் தேர்தலில், “நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் உள்ளது” என்று தி.மு.க. கூறியதைச் சுட்டிக்காட்டிய பழனிசாமி, “ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வரே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்கிறார். இதுதான் உதயநிதியின் நீட் ரத்து ரகசியமா?” என்று கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருள் புழக்கம்
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை விற்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க.வினர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.