- Home
- Tamil Nadu News
- முன்னாள் செய்தியாளர் நிரஞ்சனுக்கு அதிமுக அதிரடி நோட்டீஸ்..! மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடவடிக்கை
முன்னாள் செய்தியாளர் நிரஞ்சனுக்கு அதிமுக அதிரடி நோட்டீஸ்..! மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடவடிக்கை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு முகத்தை மூடியபடி எடப்பாடி பழனசாமி வெளியே வந்ததாக செய்தி வெளியிட்ட நிரஞ்சன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 16ம் தேதி குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதாகக்கூறி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்ற பழனிசாமி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு அன்றைய தினமே இரவு 8.10 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அமித்ஷா உடன் சந்திப்பு
முன்னதாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமித்ஷாவை சந்தித்த நிலையில் சில நிமிடங்களிலேயே பழனிசாமி மூத்த நிர்வாகிகள் அனைவரையும் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் தனது மகனுடன் அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டாக செய்திகள் வெளியாகின.
முகத்தை மூடியபடி வெளியேறிய பழனிசாமி..?
மேலும் இந்த பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பழனிசாமி மாற்று வாகனத்தில் முகத்தை மூடியபடி அமித்ஷாவின் இல்லத்தில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மூடியபடி வெளியே வந்தார் என புதிய தலைமுறையின் முன்னாள் செய்தியாளர் நிரஞ்சன் நேரடி ஒளிபரப்பில் கூறி அந்த செய்தியை பரப்பினார், இதனால் கோபம் அடைந்த அதிமுகவினர் நிரஞ்சனுக்கு எதிராக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்
அமித் ஷாவை சந்தித்து விட்டு முகத்தை மூடிய படி சென்ற எடப்பாடி😱🫣😳 #eps#bjp#admkpic.twitter.com/C0A5vFU41S
— Niranjan kumar (@niranjan2428) September 16, 2025
நோட்டீஸ் அனுப்பிய அதிமுக
இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள் சமூக வலைதளப்பதிவில், “மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறித்து, ஊடக அறத்திற்கு முற்றிலும் விரோதமாக அவதூறு செய்தி வெளியிட்டு பரப்பிய பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் மீது கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை தொடுப்பதற்கான முதல் படியாக Legal Notice அனுப்பப்பட்டுள்ளது.
திமுக சார்பு நிலைப்பாடு கொண்டு, பத்திரிகையாளர் என்ற போர்வையில், மக்கள் நம்பும் ஊடகத்தை கருவியாகக் கொண்டு திமுக-வின் Narrative-களை சுமக்கும் கொத்தடிமைகளை அஇஅதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.
"மக்களாட்சியின் நான்காம் தூண்" என்ற பெயருக்கு இலக்கணமாகத் திகழ வேண்டிய ஊடகங்கள், ஒரு கட்சியின், அதுவும் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துள்ள திமுக-வின் Agenda Carriers-ஆக செயல்படுவது, தங்களை நம்பும் தமிழக மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் என்பதை உணர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.