- Home
- Tamil Nadu News
- 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! இளைஞர்களுக்கு அடுத்த ஜாக்பாட் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு
50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! இளைஞர்களுக்கு அடுத்த ஜாக்பாட் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு
தமிழகத்தில் ரூ.5000 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமம் கரூர், பெரம்பலூரில் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது.

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! இளைஞர்களுக்கு அடுத்த ஜாக்பாட் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்திட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தொழில் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
5000 கோடி ரூபாய் முதலீடு- 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம்
மேலும் பெரும் அளவில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி, ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுதப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல் அல்லாத காலணி உற்பத்தி
அதன் படி தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால்,
இம்மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.