- Home
- Tamil Nadu News
- சென்னை
- வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னையில் இன்று இந்த நேரம் முதல் போக்குவரத்து மாற்றம்!
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னையில் இன்று இந்த நேரம் முதல் போக்குவரத்து மாற்றம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஒற்றுமை பேரணியையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை 5.00 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. இப்பேரணி காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறுகிறது. இப்பேரணியில் அமைச்சர்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 25,000 நபர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து மாற்றங்கள்
* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
* அண்ணா சிலையிலிருந்து வரும் எம்டிசி மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.
* இதேபோல், கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
* காந்தி சிலை அருகாமையில் காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கிவிடும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்த சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி, ஸ்கௌட் மைதானம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பங்கேற்பாளர்களுக்காக பொதுப்பணித்துறை மைதானத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* வி.ஐ.பி. வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்திற்குள் நுழையலாம்.
* பொது வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.