எங்களை டச் பண்ணுவது.. நெருப்போடு விளையாடுவதற்கு சமம்.. அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்..!
அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம் ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர் தூவியும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, முனுசாமி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- திமுக என்பது ஒரு ஊழல் கட்சி அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்த நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவானது. திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ள நிலையில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம். பல நல்ல திட்டங்களை தொடங்கலாம்.
அண்ணாமலை இன்று தான் சொல்கிறார். ஆனால், நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம் ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன். எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம் என்றார்.
தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. கூட்டணிக் குறித்து அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழுத் தான் முடிவுச் செய்யும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.