கவச உடையணிந்து வாக்களித்த திமுக எம்.பி. கனிமொழி... கொரோனாவையும் தாண்டி நிறைவேற்றப்பட்ட ஜனநாயக கடமை...!
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார் கனிமொழி.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி.கனிமொழிக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக கனிமொழிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கனிமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முன்னிட்டும்,
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வாக்குச்சாவடிக்கு முன்பு உள்ள சானிடைசர் மற்றும் கையுறைகளை பயன்படுத்தி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களும், தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருப்பவர்களும் வாக்களிப்பதற்காக கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களித்து வருகின்றனர்.
கொரோனா நோயாளிகளுக்கு முழு கவச உடையான பிபிஇ கிட் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடியில் இருக்கும் பணியாளர்களும் கவச உடை அணிந்த பிறகே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.பி. கனிமொழி கவச உடையணிந்து ஜனநாயக கடமையாற்றினார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார் கனிமொழி.