Bharathiyar Memorial Day: பாரதியார் நினைவு தினம் இன்று..மகாகவி பாரதியாரின் சிறப்புகள் பற்றிய சுவாரஸ்யமான பதிவு
Bharathiyar Memorial Day 2022: கண்ணம்மாவின் காதலன், மகாகவி சுப்பிரமணிய பாரதி எனும் தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்று எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதையடுத்து, சில காலம் காசியில் வசித்து வந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.
1904 முதல் 1906 வரை சுதேச மித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார்.
தமிழ், சுதந்திரம், பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு, இந்திய விடுதலை, மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் -11 பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாள் இன்று முதல் 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.