கலைத்துறையையே கலங்க வைத்த மரணம்... பிரபல ஓவியர் கொரோனா தொற்றுக்கு பலி...!
தத்ரூப ஓவியங்களால் புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது ஓவியம் தானா? அல்லது ஏதாவது ஒரு பெண்ணை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்களா? என பார்க்கும் அனைவரும் வியக்கும் வண்ணம் உயிரோட்டத்துடன் தத்ரூப ஓவியங்களை வரையும் திறமை கொண்டவர் இளையராஜா.
கும்பகோணம் அருகேயுள்ள செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காகளுடன் வளர்ந்தவர். சிறிய கிராமத்தில் பிறந்தாலும் உலகின் புகழ் பெற்ற ஓவிய கண்காட்சிகளில் எல்லாம் இவருடைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
தாவணி பாவாடை, தலை நிறைய மல்லிகை, முகம் முழுக்க வெட்கம் என கிராமத்து பெண்களை தத்ரூபமாக வரைவதில் மகா கெட்டிக்காரர். இவருடைய ஓவியங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய கிராமத்தின் அழகை பறைசாற்றும் படி இருக்கும்.
கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். அன்றிலிருந்தே சளி போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து சில நாட்களிலேயே அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பது அடுத்தடுத்து கண்டறியப்பட்டது. இளையராஜாவிற்கும் சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.