Easy Shopping : உங்களுடைய ஷாப்பிங் சுமையை தூக்கிவர இனி ஆள் வச்சுக்கலாம்!
Easy Shopping : இனிமேல் நீங்கள் ஷாப்பிங் மட்டும் செய்தால் போதும். உங்களுடைய ஷாப்பிங் பொருட்களை தூக்கிவருவதற்கு இருக்கவே இருக்கிறது 'கேரிமேன்' சேவை. குடும்பங்களுடன் ஷாப்பிங் செய்வதற்கு இந்த சேவை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

டெல்லியில் அறிமுகம்
பண்டிகை காலங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ கடை வீதிகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும், வாங்கும் பொருட்களைக் கொண்ட கனமான பைகளைச் சுமந்து கொண்டு அலைவது சிரமமான காரியம். குறிப்பாகப் பெண்களுக்கு ஷாப்பிங் செய்யும்போது பைகளைத் தூக்கி வரவும், பில்லிங் கவுண்டர்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கவும் யாராவது துணையாக இருக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். இந்தச் சிரமத்திற்குத் தீர்வாக டெல்லியில் ஒரு ஸ்டார்ட்அப் துவங்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஷாப்பிங் செய்பவர்களுக்கு உதவும் வகையில் ‘கேரிமேன்’ (Carryman) என்ற பிரத்யேகச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தச் சேவையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
• பைகளைச் சுமக்கத் தேவையில்லை: ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் வாங்கும் பொருள்களின் பைகளை உங்களுடன் வரும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் பாதுகாப்பாகச் சுமந்து வருவார்கள்.
• நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்: கடைகளில் பில் போடுவதற்காக எவ்வளவு பெரிய க்யூ (Queue) இருந்தாலும், உங்களுக்காக அந்த ஊழியர்களே வரிசையில் நின்று பொருள்களை வாங்கிக் கொடுப்பார்கள்.
• கூட்ட நெரிசலில் பாதுகாப்பு: அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த கடை வீதிகளில் உங்களைச் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கு வழிகாட்டவும் இவர்கள் உதவுவார்கள்.
யாருக்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்?
கனமான பைகளைச் சுமக்கத் தயங்கும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடைக்கு வருவோர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள் போன்றோருக்கு இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
முதற்கட்டமாக டெல்லியில் உள்ள புகழ்பெற்ற 'லஜ்பத் நகர்' பகுதியில் இந்தச் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டணமாக வெறும் ரூ.79 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்கென ஒரு பிரத்யேக இணையத்தளம் உருவாக்கப்பட்டு, மிக விரைவில் முழு அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த 'கேரிமேன்' சேவை, இனிமேல் ஷாப்பிங் செல்பவர்களுக்கு ஒரு சிறந்த உதவியாளராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விரைவில் இந்த சேவை தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதே இங்குள்ள இல்லத்தரசிகளின் லேட்டஸ்ட் கனவாக இருக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

