- Home
- இந்தியா
- 'உனக்காக நான் இருக்கேன்'... நண்பனுக்காக இறங்கிவந்த மோடி; ஒரே நிமிடத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்!
'உனக்காக நான் இருக்கேன்'... நண்பனுக்காக இறங்கிவந்த மோடி; ஒரே நிமிடத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்!
பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அஸ்கர் அலிக்குச் சொந்தமான மும்பை நிலத்தை, பாஜக எம்.எல்.ஏ மேத்தா நிறுவனம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமித்தது. 15 ஆண்டுகளாகத் தீராத இப்பிரச்னையை அஸ்கர் அலி பிரதமரிடம் முறையிட்ட சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்தது.

ஒரே நாளில் முடிந்த 15 ஆண்டுகால அநீதி
அரசியல் அதிகாரம், ஆளுங்கட்சி பலம், பல நூறு கோடிகள் புழங்கும் ரியல் எஸ்டேட் வலைப் பின்னல் என சாமானியர்கள் எட்டிப்பார்க்கவே அஞ்சும் ஒரு விவகாரத்தில், நாட்டின் பிரதமரே நேரடியாகத் தலையிட்டால் என்ன நடக்கும்? 15 ஆண்டுகளாக அலைய வைக்கப்பட்ட ஒரு முதியவரின் கண்ணீருக்கு, அடுத்த சில மணி நேரங்களிலேயே விடை கிடைத்துள்ள அதிரடி சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
வட்நகர் பள்ளி நட்பு: 81 வயதில் மோடியைத் தேடி வந்த தோழன்!
குஜராத்தின் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் மோடியுடன் ஒன்றாக பெஞ்சில் அமர்ந்து படித்தவர் அஸ்கர் அலி வோரா (81). தற்போது மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மீரா ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 1989-ம் ஆண்டு, மும்பை பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில் சுமார் 2,810 சதுர மீ. பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை அஸ்கர் அலி வாங்கியிருந்தார். ஆனால், அவர் அந்த நிலத்தை யாருக்கும் விற்காத நிலையிலும், 2011-ல் போலி ஆவணங்கள் மூலம் 'சுவயம் பில்டர்ஸ்' மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவின் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்கள் அந்த நிலத்தைக் கபளீகரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
15 ஆண்டு காலப் போராட்டம்... சிபிஐ விசாரணை கோரிய நண்பர்!
நகராட்சி, வருவாய்த் துறை, காவல்துறை என அனைத்துக் கதவுகளையும் 15 ஆண்டுகளாகத் தட்டியும் அஸ்கர் அலிக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மாறாக, அந்தச் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பயந்தர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் துறையே அனுமதியும் வழங்கியது.
அதிகார வர்க்கத்தால் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்ட அஸ்கர் அலி, கடந்த 8-ஆம் தேதி டெல்லிக்குச் சென்று தன் பால்ய நண்பரான பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கியதுடன், போலி ஆவணங்கள் தயாரித்த பில்டர்கள் மற்றும் அதிகாரிகளின் தொடர்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமரிடம் முறையிட்டார்.
அடுத்த நொடியே பறந்த உத்தரவு: நடுநடுங்கிய மகாராஷ்டிர அரசு!
பள்ளித் தோழரின் முறையீட்டைக் கேட்ட பிரதமர் மோடி உடனடியாக விவகாரத்தைக் கையில் எடுத்தார். அடுத்த கணமே மகாராஷ்டிர அரசு இயந்திரம் ஜெட் வேகத்தில் சுழலத் தொடங்கியது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில், மும்பை மந்திராலயாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட அஸ்கர் அலி, குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா பினோத் சர்மா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆஜராகினர்.
ஒரே நாளில் முடிந்த 15 ஆண்டுகால அநீதி!
பிரதமரின் அதிரடித் தலையீட்டைத் தொடர்ந்து விவகாரம் பூதாகரமானதால், பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா உடனடியாகப் பணிந்தார். சர்ச்சைக்குரிய 2,810 சதுர மீட்டர் நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பையும் உரிமையையும் முழுமையாகக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வ கடிதம் அளித்தார். மாநகராட்சியில் பெற்றிருந்த கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியைத் திரும்ப ஒப்படைத்தார்.
காவல்துறைக்குக் கடிதம் அனுப்பி, அஸ்கர் அலிக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அஸ்கர் அலியும் எம்.எல்.ஏ மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார். அதிகார பலத்தாலும் போலிஆவணங்களாலும் 15 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டு இருந்த நிலம், பிரதமர் மோடியின் ஒற்றைத் தலையீட்டால் அடுத்த சில மணி நேரங்களிலேயே உண்மையான உரிமையாளரான பள்ளி நண்பரிடம் சுமுகமாக ஒப்படைக்கப்பட்டது.

