12 லட்சம் அரசு ஊழியர்கள் ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்! மத்திய அரசு அதிரடி!
மத்திய அரசின் சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கான மின்னஞ்சல் சேவை, தேசிய தகவல் மையத்திடமிருந்து (NIC) தமிழ்நாட்டின் ஜோஹோ கார்ப்பரேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 7 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்
பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட மத்திய அரசின் சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கான மின்னஞ்சல் சேவை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'ஜோஹோ கார்ப்பரேஷன்' (Zoho Corporation) உருவாக்கிய தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த தேசிய தகவல் மையத்தின் (NIC) மின்னஞ்சல் சேவையை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்ப மாற்றமாகும்.
ஜோஹோவுடன் 7 ஆண்டு ஒப்பந்தம்
இந்தியாவின் டிஜிட்டல் தன்னிறைவை வலுப்படுத்தும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பான, உள்நாட்டிலேயே உருவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவது என்ற மத்திய அரசின் இலக்கின்படி, ஜோஹோ சேவையைப் பயன்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. முன்பு அலுவல் ரீதியான பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட ஓபன் சோர்ஸ் (open-source) கருவிகளையும் ஜோஹோ தொகுப்பு (Zoho suite) தற்போது மாற்றியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஜோஹோவுக்கு இந்த மின்னஞ்சல் சேவைப் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும், மத்திய அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் தொடர்ந்து nic.in மற்றும் gov.in என்ற டொமைன்களையே பயன்படுத்தும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தரவுப் பாதுகாப்பு உறுதி
தகவல் தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவை குறித்து NIC மற்றும் CERT-In உடன் கலந்தாலோசிக்கப்பட்டு, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தரவு ஒருமைப்பாட்டை உறுதி செய்ய, மென்பொருள் தர அமைப்புகள் (SQS) மூலம் வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகள் (audits) தொடர்ந்து நடைபெறும் என்று ஒரு மூத்த அதிகாரி உறுதியளித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.பி.எஸ். சித்து, இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், "தரவு பாதுகாப்பு நெறிமுறைகள் மிகவும் உறுதியானதாக" இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சாத்தியமான இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள தரவு மையங்களின் (data centres) சுயாதீன தணிக்கைகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் இந்தியா
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 1976 இல் நிறுவப்பட்ட NIC, பல தசாப்தங்களாக அரசு மின்னஞ்சல் உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது.
நவம்பர் 2022 இல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் நடந்த இணையத் தாக்குதல், அரசு டிஜிட்டல் உள்கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்யத் தூண்டியது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2023 இல் பாதுகாப்பான கிளவுட் சேவை வழங்குநருக்காக 'டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்' விடுக்கப்பட்ட அழைப்பின் மூலமாகவே ஜோஹோ தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீதர் வேம்பு விளக்கம்
தனிப்பட்ட மின்னஞ்சல் மாற்றம் குறித்து சில மத்திய அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் NIC டொமைன்களிலேயே இருக்கும் என்றும், இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தனது அரட்டை (Arattai) செயலியின் தனியுரிமை குறித்து எழுந்த கவலைகளுக்குப் பதிலளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டது என்றும், பயனர் தரவை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். அனைத்து சேவைகளிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.