பிரஷர் தாங்க முடியல... இதுதான் என்னுடைய கடைசி படம் - தடாலடியாக அறிவித்த வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் தான் இனி படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று பேட் கேர்ள் படத்தின் விழாவில் தடாலடியாக அறிவித்து இருக்கிறார்.

Vetrimaaran Shuts his Production house
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய 7 படங்கள் வந்துள்ளன. இந்த 7 படங்களும் ஹிட்டாகின. இதையடுத்து அவர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி வருகிறார். இதுதவிர வட சென்னை இரண்டாம் பாகம், வாடிவாசல் போன்ற படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் படம் இயக்குவதில் மட்டுமின்றி படம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் தயாரித்த படங்கள்
இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2012ம் ஆண்டு கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம், முதன்முதலில் தயாரித்த படம் உதயம் என்.ஹெச்.4, இதையடுத்து பொறியாளன், காக்கா முட்டை, விசாரணை, கொடி, வட சென்னை, மிக மிக அவசரம், கருடன், பேட் கேர்ள் போன்ற படங்களையும், பேட்டைக்காளி என்கிற வெப் தொடரையும் தயாரித்திருந்தது. இதில் காக்கா முட்டை, விசாரணை ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதை வென்றது. இந்த நிலையில், அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை முழுவதுமாக இழுத்து மூடுவதாக அறிவித்திருக்கிறார்.
பேட் கேர்ள் பட விழா
பேட் கேர்ள் பட விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது : “தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப கஷ்டமான வேலை. இயக்குனர் வேலை ரொம்ப ஜாலியானது. கிரியேட்டிவ் ஆக இருப்போம், நம்ம வேலையை மட்டும் நம்ம செய்வோம். ஒரு தயாரிப்பாளராக இருந்தால், வீடியோவுக்கு கீழ வர்ற கமெண்ட்ல இருந்து எல்லாவற்றிற்கும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. நான் தயாரித்து ஏற்கனவே ஒரு படம் கோர்ட்டில் இருக்கிறது. தற்போது பேட் கேர்ள் படமும் மறு தணிக்கைக்கு போய், யு/ஏ சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். படத்துடைய டீசர் பார்த்துவிட்டு ரொம்ப சென்சிடிவ் ஆன சில கமெண்ட்கள் இருந்தன. ஆனால் படம் அந்த மாதிரியானது இல்லை.
தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய வெற்றிமாறன்
தணிக்கை குழு தான் எந்த படத்தை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மாணிக்கிறார்கள். இதற்கு முன்னர் நான் தயாரித்த மனுஷி, ஒரு சென்சார் ஸ்கிரீனிங், இரண்டு ரிவைசிங் கமிட்டி ஸ்கிரீனிங் முடித்து தற்போது கோர்ட்டுக்கு சென்று வந்திருக்கிறது. என்னைமாதிரி ஆளுக்கு தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பெரிய சவால் ஆனதாக இருக்கிறது. பிரஷர் தாங்க முடியல. அதனால் நான் முடிவெடுத்துள்ளது என்னவென்றால், பேட் கேர்ள் தான் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தின் கடைசி படம். அதுக்கப்புறம் இந்த தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்” என திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.