- Home
- Career
- "மார்க் முக்கியம் தான்... ஆனா உயிர் அதைவிட முக்கியம்" - மாணவர்களைக் காக்க வேண்டிய தருணம் இது!
"மார்க் முக்கியம் தான்... ஆனா உயிர் அதைவிட முக்கியம்" - மாணவர்களைக் காக்க வேண்டிய தருணம் இது!
Exam தேர்வு மன அழுத்தம் தேர்வு அறையில் தொடங்குவதில்லை. மாணவர்களிடம் காணப்படும் மன அழுத்த அறிகுறிகள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை பற்றி இங்கே படியுங்கள்.

Exam மெல்ல மெல்ல கொல்லும் மன அழுத்தம்
பொதுவாகத் தேர்வு நேரங்களில் மாணவர்கள் பதற்றமாக இருப்பது இயல்பானது என்று நாம் நினைப்போம். ஆனால், உண்மை என்னவென்றால், தேர்வு அறைக்குள் நுழைவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே மாணவர்களின் மனதில் அழுத்தம் குடியேறிவிடுகிறது. "மார்க் குறைந்தால் என்ன ஆகுமோ?" என்ற பயம், தூக்கமின்மை, பசியின்மை மற்றும் தனிமை எனப் பல்வேறு வடிவங்களில் இது வெளிப்படுகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதைக் கவனிக்கத் தவறுவதே பெரிய பிரச்சனையாக மாறுகிறது.
எது மன அழுத்தத்தைத் தூண்டுகிறது?
IC3 நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 8,500 மாணவர்களிடம் கேட்கப்பட்டதில், ஐந்தில் ஒரு மாணவர் கல்விச் செயல்பாடு (Academic Performance) மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர். மதிப்பெண்களைத் திறமையின் அளவுகோலாகப் பார்க்காமல், கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கும் சமூகப் பார்வைதான் இதற்கு முக்கியக் காரணம்.
அறிகுறிகள் என்ன?
மாணவர்கள் எப்போதும் சோர்வாக இருப்பது, சட்டென்று கோபப்படுவது (Irritability), யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பது போன்றவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாகும். சுமார் 25% மாணவர்கள் தங்களுக்கு அமைதி என்பதே இல்லை என்று கூறியுள்ளனர். இது வெறும் தேர்வு பயம் அல்ல; இது ஒருவகை உணர்வுப்பூர்வமான சோர்வு (Emotional Fatigue).
தூக்கமின்மை என்னும் எதிரி
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடத்தில் நான்கில் மூன்று பேர், ஒரு நாளைக்குத் தேவையான 7-8 மணி நேரத் தூக்கத்தைப் பெறுவதில்லை. நீண்ட நேரம் படிப்பது மட்டும் இதற்குக் காரணமல்ல; அதிகப்படியான சிந்தனை (Overthinking) மற்றும் இரவு நேரங்களில் மொபைல் பயன்பாடும் முக்கியக் காரணங்கள். தூக்கமின்மை மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்து, மனச்சோர்வை அதிகரிக்கிறது.
பெற்றோர்களின் பங்கு என்ன?
"படித்துவிட்டாயா?", "எவ்வளவு மார்க் வாங்குவ?" என்று கேட்பதைத் தவிர்த்து, "உனக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா?", "இப்போது நீ எப்படி உணர்கிறாய்?" என்று மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிள்ளைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
தீர்வு என்ன?
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறார்கள். ஆசிரியர்களிடமோ, பள்ளி ஆலோசகர்களிடமோ (Counselors) செல்லத் தயங்குகிறார்கள். எனவே, பள்ளிகள் மாணவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் மனநல ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். சரியான நேரத்தில் வழங்கப்படும் வழிகாட்டுதல், மாணவர்களின் பயத்தைப் போக்கி, நம்பிக்கையை விதைக்கும்.

