நிலையான கழிவு என்றால் என்ன? ரூ.75,000 கூடுதல் வருமான வரி சலுகை யாருக்கு?
Standard deduction under new tax regime: சம்பளத்தின் மீதான நிலையான கழிவு, மொத்த வரிச் சுமையைக் குறைத்து, வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைக்கிறது. இதன் மூலம் மாதச் சம்பளம் பெறும் தனிநபர்கள் வரி விலக்கு பெற உதவுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி விலக்கு அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். இது நடுத்தர வர்க்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. இத்துடன் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.75,000 நிலையான கழிவையும் கணக்கில் கொண்டால், ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
நிலையான விலக்கு என்றால் என்ன? பழைய மற்றும் புதிய வரி முறைகளில் வரி செலுத்துவோருக்கு இதன் மூலம் கிடைக்கும் பலன் எவ்வளவு என்று பார்க்கலாம்.
சம்பளத்தின் மீதான நிலையான விலக்கு, சம்பளம் பெறும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்குகிறது. ஒரு நிலையான தொகையைக் குறைப்பதன் மூலம் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைக்கிறது.
2024 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் எனப்படும் நிலையான கழிவுக்கான வரம்பை 50,000 லிருந்து 75,000 ஆக உயர்த்தினார். இருப்பினும், இந்த விலக்கு புதிய வரி முறைக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயம் பழைய வரி முறையின் கீழ் நிலையான கழிவு மாறாமல் இருக்கிறது. பழைய வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை. வரி செலுத்துவோர் பழைய வரி முறையின் கீழ் ரூ.50,000 மட்டுமே நிலையான கழிவு பெற முடியும்.
புதிய வரி முறையின் கீழ் நிலையான கழிவு ரூ. 50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது. இது வரி செலுத்துவோர் மீதான நிதி நெருக்கடியைக் குறைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இதனால், 2024-25 நிதி ஆண்டில் இருந்து இது அமலில் உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரி முறைக்கான நிலையான கழிவு மாற்றப்படவில்லை. இதன் மூலம் புதிய வரி முறையைத் தேர்வு செய்யும்போது, ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கும்.
income tax
உதாரணமாக, ரூ10,00,000 மொத்த ஆண்டு சம்பளம் பெறும் ஒருவருக்கு, புதிய வரி முறையின் கீழ் ரூ. 75,000 நிலையான கழிவு கிடைக்கும். இதன் மூலம் அவரது வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.9,25,000 ஆகும். குறைக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி, செலுத்த வேண்டிய வரி கணக்கிடப்படும். இது ஊழியர் மீதான ஒட்டுமொத்த வரிச்சுமையைக் குறைக்கும்.