- Home
- Business
- ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகைகள் இருக்கா? ஒன்னு விடாம நோட் பண்ணிக்கோங்க.. முழு விவரம்!
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகைகள் இருக்கா? ஒன்னு விடாம நோட் பண்ணிக்கோங்க.. முழு விவரம்!
Indian Railways Senior Citizen Benefits: இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயிலில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து கொடுக்கிறது. அதுவும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்
டிக்கெட் கவுண்ட்டர்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் மூத்த குடிமக்கள் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பது பெரிய மலையை கடப்பது போன்றதாகும்.
ஆகவே முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி மூத்த குடிமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்கள் விரைவாக டிக்கெட்டுகளைப் பெற முடிகிறது.
லோயர் பெர்த் வசதியும் உண்டு
ரயில்களில் நடு இருக்கை மற்றும் மேல் இருக்கையில் வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் ஏறுவது மிகவும் சிரமமாகும். இதனால் அவர்கள் லோயர் பெர்த்துக்காக மற்ற பயணிகளிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதை தவிர்க்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமம் ஏற்படாதவாறு லோயர் பெர்த் எனப்படும் கீழ் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
இந்த வசதிகளின் மூலம் ஸ்லீப்பர் பெட்டிகளில் 6 முதல் 7 லோயர் பெர்த்தகள், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் 4 முதல் 5 லோயர் பெர்த்கள் வரை எளிதாக கிடைக்கும். ரயில் புறப்பட்ட பிறகும் கீழ் இருக்கைகள் காலியாக இருந்தால், அது தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
சக்கர நாற்காலி வசதியும் கிடைக்கிறது
இந்தியாவில் சுமார் 6.000 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலில் வசதிகள் உள்ளன. ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் ரயிலின் வாசல் வரை சென்று விட முடிகிறது.
உள்ளூர் ரயில்களில் சீட் கன்பார்ம்
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் எதாவது அதிசயம் நடந்தால் தான் சீட் கிடைக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களின் உள்ளூர் ரயில்களிலும் இதுதான் நிலைமை. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் வழங்குகிறது. இதனால் அவர்கள் நின்று கொண்ட பயணம் செய்ய வேண்டியதில்லை.
பேட்டரி கார்கள்
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் கார்களை (கோல்ஃப் வண்டிகள்) மூத்த குடிமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

