- Home
- Business
- இனி டோல்கேட்டில் நிற்க தேவையில்லை.. பயண நேரம் பாதியாக குறையும்.. வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!
இனி டோல்கேட்டில் நிற்க தேவையில்லை.. பயண நேரம் பாதியாக குறையும்.. வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!
MLFF Toll System: இனி வாகனங்கள் டோல்கேட்டில் நிற்க தேவையில்லாத 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சிஸ்டம் முறை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறையும்.

டோல்கேட்டில் மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ சிஸ்டம்
இந்தியாவிலேயே முதல்முறையாக, டோல்கேட்களில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் புதிய தொழில்நுட்பத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்னோடித் திட்டம், நெடுஞ்சாலைப் பயண அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள சூரத்-பரூச் இடையேயான தேசிய நெடுஞ்சாலை-48ல் இருக்கும் சோரயாசி டோல் பிளாசாவில்தான் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) சிஸ்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோல் பூத்களில் தடுப்புகள் இருக்காது
இந்த புதிய முறையில், டோல் பூத்களில் தடுப்புகள் இருக்காது. வாகனங்கள் நிற்காமலேயே கடந்து செல்லலாம். ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் மூலம் டோல் கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும். இந்த சிஸ்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 41,500 வாகனங்கள் இந்த டோல் பிளாசாவைக் கடந்து சென்றுள்ளன.
பயண நேரம் மிச்சமாகும்
இந்த புதிய வசதியால், டோல்களில் போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் மிச்சமாகும், எரிபொருள் சிக்கனமாகும், மற்றும் வாகனப் புகையால் ஏற்படும் மாசும் குறையும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
இந்த வசதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாவிட்டாலோ அல்லது ஃபாஸ்டேக் செல்லுபடியாகாவிட்டாலோ, வாகன உரிமையாளருக்கு 'எலக்ட்ரானிக் நோட்டீஸ்' (E-Notice) அனுப்பப்படும்.
இரண்டு மடங்கு அபராதம்
இந்த நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் சாதாரண டோல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும். தொடர்ந்து கட்டணம் செலுத்தாமல் இருந்தால், ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு, 'வாகன்' (VAHAN) தளம் மூலமான மற்ற வாகன சேவைகளிலும் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த MLFF சிஸ்டம், டோல் வசூலிக்கும் செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாக மாற்றும். டோல் பிளாசாக்களை அமைப்பதற்கான செலவுகளையும் குறைக்கும். இதன் மூலம், நாடு முழுவதும் டோல் வசூலிக்கும் முறை இன்னும் திறமையாகவும், சிக்கனமாகவும் மாறும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழகத்தில் எப்போது வரும்?
குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டத்தை தொடர்ந்து தமிழகத்திலும் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH-48) உள்ள நெமிலி மற்றும் செந்நசமுத்திரம் டோல் பிளாசாக்கள், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் (NH-45) உள்ள பரனூர் டோல் பிளாசா என மூன்று முக்கிய டோல் பிளாசாக்களில் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) முறையை அமல்படுத்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

