- Home
- Astrology
- Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்
The 5 Zodiac Signs That Need to Be Extremely Cautious During the Last 10 Days of May: மே மாதம் கடைசி 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

May Month Horoscope 2026
மே மாதம் முடிய இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது. மே 22 முதல் மே 31 வரை ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். இந்த காலகட்டத்தில் சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன், தொழிலின் அதிபதியான புதன் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஆகியோரின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சவாலான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். மே கடைசி பத்து நாட்கள் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.

மே இறுதியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மே மாத இறுதியில் சூரியனுக்கு அருகில் சுக்கிரன் வரும் பொழுது அவர் அஸ்தமன நிலையை அடைகிறார். சுக்கிர பகவான் ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரகராவர். சூரியனின் வெப்பத்தால் சுக்கிர பகவான் பலத்தை இழக்கும் பொழுது, அது சில ராசிகளுக்கு தேவையில்லாத மன உளைச்சலையும், அழுத்தத்தையும் கொடுக்கும். அதே சமயம் செவ்வாய் கிரகம் மீன ராசியில் ராகுவுடன் இணைந்து அங்காரக தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மே இறுதியில் சில ராசிகளுக்கு பதற்றமான சூழல் ஏற்படலாம்.
ரிஷபம்
மே மாத இறுதியில் ரிஷப ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில பலன்கள் கிடைத்தாலும் சுக்கிரனின் அஸ்தமனம் மற்றும் அங்காரக தோஷம் ஆகியவை உங்களுக்கு தேவையற்ற கோபம், உடல் உபாதைகள், உடல் நலக்குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால் நிதி ரீதியான பிரச்சனைகள் உருவாகலாம். கணவன் மனைவிக்கு இடையே தகராறுகள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொறுமையாக இந்த பத்து நாட்களை கடப்பது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. களத்திர ஸ்தானம் என்பது திருமணம் மற்றும் கூட்டுத் தொழில் ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் வாழ்க்கைத் துணை அல்லது தொழிலில் கூட்டாளிகளுடன் தேவையற்ற தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை காரணமாக உங்கள் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படலாம். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பிரச்சனைகளை உருவாக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய முதலீடுகளை மே இறுதிவரை தள்ளி வைக்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது வேகத்தை குறைப்பது நல்லது.
பரிகாரம்: காலபைரவரை வழிபடுவது பிரச்சனைகளை குறைக்க உதவும்.
சிம்மம்
மே இறுதி 10 நாட்கள் சிம்ம ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் தொழில் ரீதியாக சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இதன் காரணமாக வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே உங்கள் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் சோர்வு அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசிக்கு ஆறாம் வீடான சத்ரு ஸ்தானத்தில் கிரகங்களின் மாற்றம் நடைபெற இருக்கிறது. இது எதிரிகள் ஸ்தானத்தை குறிக்கும் என்பதால் எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சிறு பாதிப்புகளையும் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும். தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்தல் கூடாது. கடன் வாங்கும் சூழல் உருவாகலாம் என்பதால் வரவு செலவு கணக்கில் கவனத்துடன் இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் தாமதமான முடிவுகள் கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடும்.
பரிகாரம்: உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வழிபடுவது நிம்மதி தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தந்தை அல்லது தாயாரின் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். வீடு அல்லது வாகன பராமரிப்புக்கான செலவுகள் ஏற்படலாம். சனி பகவானின் தாக்கமும் இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படலாம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளை இந்த மாத இறுதியில் மேற்கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம். முக்கிய முடிவுகளை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பது நல்ல பலன்களைத் தரும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் சமர்ப்பித்து வழிபடுவது நல்லது.
12 ராசிகளுக்குமான எளிய பரிகாரங்கள்
- மே மாதத்தின் கடைசி பத்து நாட்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
- மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி காயத்ரி மந்திரத்தை ஓதுவது நல்லது.
- சுக்கிரன் பலம் இழப்பதால் சுக்கிர பகவானின் அதிபதியான மகாலட்சுமி தாயாருக்கு வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட பணம் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.
- செவ்வாய் மற்றும் ராகுவின் எதிர்மறை பலன்களைத் தவிர்ப்பதற்கு முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.
- ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது, கந்த சஷ்டி கவசம் படிப்பது ஆகியவை தோஷங்களை விலக்கி மன அமைதியைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

