உ.பி.யில் பயங்கரம்.. தலித் சிறுவனை துன்புறுத்தி வீடியோ - ஏழு பேர் அதிரடி கைது...!
குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டும், சிறுவனை சுற்றியும் நின்று கொண்டிருந்தனர்.
இந்தியாவில் சாதிய பாகுபாடு சார்ந்த குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. சாதிய பெருமை காரணமாக கொலை, துன்புறுத்தல், என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் மைனர் சிறுவனை துன்புறத்தி, பாதத்தை வாயால் சுத்தம் செய்ய வைத்த நபர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வைரல் வீடியோ:
இதே சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 2 நிமிடம் 30 நொடிகள் ஓடும் வைரல் வீடியோவில், பாதிக்கப்பட்ட மைனர் சிறுவன் தரையில் முழங்காலிட்டு காதில் கை வைத்தப்படி அஞ்சி நடுங்குகிறான். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டும், சிறுவனை சுற்றியும் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் அங்கிருந்தவர்களில் ஒருவன் சிறுவனிடம் தாக்குர் என சொல் என்று மிரட்டுகிறார். மற்றொருவன் மீண்டும் இது போன்ற தவறை செய்வாயா என கேட்கிறான். மற்றொரு வீடியோக்களில் மர்ம நபர்கள் சிறுவனை கேள்விகளால் துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. வீடியோ வைரல் ஆனதை அடுத்து சிறுவனை துன்புறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது:
இந்த சம்பவம் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்று இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் உயர்ந்த ஜாதி என கருதப்படும் பிரிவை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் பத்தாவது வகுப்பு பயின்று வரும் மாணவர் ஆவார். இவர் விதவை தாயுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தற்போது கைது செய்யப்பட்டவர்களின் விவசாய நிலத்தில் பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாய் செய்த வேலைக்கு சம்பலம் கேட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள், சிறுவனை துன்புறுத்தி இருக்கின்றனர்.
வழக்குப்பதிவு:
ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஒருவன் சிறுவனிடம் தனது காலை வாயால் சுத்தம் செய்ய கூறி இருக்கிறான். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.