"நான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்.." 'மருதமலை’ வடிவேலு பாணியில்..சுவாரஸ்ய சம்பவம் !!
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட கைதி தஞ்சை அருகில் கை விலங்குடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொள்ளை வழக்கு :
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடந்த 2016 மற்றும் 2018 ம் ஆண்டு நடைப்பெற்ற கொள்ளை சம்பவத்தில் 38 வயதான தனசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்திருந்தனர். கொள்ளை வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனசேகரனை வியாழக்கிழமை ஆஜர்படுத்த வேண்டியிருந்தது.
அதனால் புதன்கிழமை இரவே கோபிச்செட்டிப் பாளையத்தில் இருந்து போலீசார் புறப்பட்டனர். சிறப்பு உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி தலைமையில் 4 போலீசார் கொண்ட குழுவினர் தனசேகரனுக்கு கைவிலங்கிட்டு காவல் வேனில் அழைத்துச் சென்றனர்.
வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வளம்பக்குடி என்ற இடத்தில் போலீசார் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என வாகனத்தை நிறுத்தியுள்ளனர். களைப்பாக இருந்ததால் சிறிது நேரம் கண்ணயர்ந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதிகாலை இருளில் கை விலங்குடன் கைதி தனசேகரன் தப்பியோடி விட்டார்.
எஸ்கேப் ஆன திருடன் :
காலை 6 மணிக்கு கண் விழித்து பார்த்த காவல்துறையினர் கைதியை காணவில்லை என்றதும் பதறி விட்டனர். உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளியை 5 மணிநேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை.
தப்பியோடிய கைதி மீது கத்தியை காண்பித்து வழிப்பறி செய்தது, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது, நகைபறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை, வழிப்பறி என பொதுமக்களிடம் கைவரிசை காட்டிய கைதி, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.