ஒரே இரவு… ஒரே ஏரியா…..அடுத்தடுத்து வெட்டி சாய்க்கப்பட்ட 2 ரௌடிகள்…. மதுரையில் பயங்கரம் !!
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே இரவில், 2 ரௌடிகள் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராஜா . பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ஓட்டல் தொழில் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பெரியபாண்டி என்பவரிடம் இடம் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். அந்த இடத்திற்கு தொடர்பு உடையவர்கள் கூடுதல் பணம் கேட்டு ஹரிராஜாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹரிராஜா அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஹரிராஜாவை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி, தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.
கொலை செய்யப்பட்ட ஹரிராஜாவிற்கு பாண்டீஸ்வரிஎன்ற மனைவியும், 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இதே போல் மதுரை செல்லூர் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரௌடி அசோக்குமார் இவர் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அசோக்குமாரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டது. இவர் ஏற்கனவே பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு கொலை வழக்குகள் குநித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ரெண்டு கொலைகளுக்குமே முன் விரோதம்தான் என கூறப்படுகிறது.
மதுரையில் ஒரே நாள் இரவில் செல்லூர் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது