மொகாலி தாக்குதல்.. ஒருவர் கைது... பஞ்சாப் போலீஸ் அதிரடி...!
தாக்குதலுக்கு உடந்தையாக இருந்து, உதவியும் செய்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பஞ்சாப் மாநில காவல் துறையின் உளவு பிரிவு தலைமையகத்தில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்த உதவிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து இருப்பதாக போலீசார் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாக்குதலுக்கு உடந்தையாக இருந்து, உதவியும் செய்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கைதான நபரிடம் இருந்து இந்த சம்பவம் எப்படி திட்டமிடப்பட்டது, எதற்காக இந்த சம்பவம் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
குற்றவாளி:
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இருப்பவர் தான் தரன் பகுதியை சேர்ந்த நிஷான் சிங் ஆவார். இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உளவுத் துறை தலைமையகத்தை தாக்கிய கும்பலுக்கு நிஷான் சிங் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள நிஷான் சிங் மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உளவுத்துறை தலைமையகம் தாக்கப்படுவதற்கு முன், தாக்குதலை நடத்திய இருவருக்கு நிஷான் சிங் அம்ரித்சரில் மூன்று நாட்கள் தங்க உதவி செய்து இருக்கிறார். இந்த வழக்கில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள. விரைந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்படும் என காவல் துறை இயக்குனர் வி.கே. பாவ்ரா தெரிவித்து இருக்கிறார்.
“சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாஞ்சரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை கிடைத்து இருக்கும் முக்கிய தகவல்களை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம்,” என மொகாலி போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல்:
ராக்கெட் லாஞ்சர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், உளவுத் துறை தலைமையகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அறை சேதமைடந்தது. மொகாலியின் செக்டார் 77 பகுதியில் இந்த தலைமையகம் அமைந்துள்ளது. தாக்குதல் சம்பவம் கடந்த திங்கள் கிழமை இரவு 7.45 மணி அளவில் நடத்தப்பட்டது. தாக்குதலை அடுத்து போலீசார் விசாரணையை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர்.