பூட்டிய கடையில் துண்டு துண்டாக கிடந்த மனித காதுகள், மூளை, கண்.. காவல்துறைக்கே ஷாக் கொடுத்த சம்பவம் !!!
பிளாஸ்டிக் டப்பாவை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 8 காதுகள், மூளை, கண்கள் மற்றும் முகத்தின் சில பகுதிகளும் இருந்துள்ளன.
அதிர்ச்சி அடைந்த போலீசார் :
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நாகா என்ற பகுதியில் 15 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கடை ஒன்றில் கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் குடியிருப்போர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு சென்று, மும்பை நாகா போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 2 பிளாஸ்டிக் டப்பாவை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், 8 காதுகள், மூளை, கண்கள் மற்றும் முகத்தின் சில பகுதிகளும் இருந்துள்ளன. இந்த சம்பவம் போலீசாருக்கு மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது கொலையாக இருக்காது என்றும் போலீசார் கருதுகின்றனர். ஏனெனில், மனித உறுப்புகள் ரசாயனத்தில் மூழ்க வைக்கப்பட்டு உள்ளன. மருத்துவ நோக்கங்களுக்காக அவை வைக்கப்பட்டு இருக்க கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கொலையா ? மருத்துவ ஆராய்ச்சியா ? :
இது குறித்து கூறிய போலீசார், இறந்த மனித உடல் எங்களுக்கு கிடைத்து இருந்தால், அது கொலையாக இருக்க கூடும் என எங்களுக்கு சந்தேகம் வரும். ஆனால், முறையாக வெட்டப்பட்ட 8 காதுகள் உள்ளன. அந்த கடையின் உரிமையாளர் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால், கடை உரிமையாளரின் 2 மகன்கள் மருத்துவர்களாக உள்ளனர். அதனால், இந்த உறுப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கலாம். எனினும், அனைத்து கோணங்களிலும் நாங்கள் அலசி ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.