குறைந்த விலையில் தங்கம்.. 96 லட்சம் அபேஸ் செய்த கும்பல்.. பக்கா பிளான் போட்டு தூக்கிய பின்னணி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கிராமிற்கு ரூ 400 குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து மிரட்டி பணத்தை பறித்து தப்பியோடிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசைப்பட்டு, சிக்கலில் சிக்கிய பின்னணி குறித்த தொகுப்பு..
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கிராமிற்கு ரூ 400 குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து மிரட்டி பணத்தை பறித்து தப்பியோடிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசைப்பட்டு, சிக்கலில் சிக்கிய பின்னணி குறித்த தொகுப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அங்கு பிரபலமாக நகைக்கடை ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் வியாபார ரீதியாக இவருக்கு, சின்னசேலத்தை சேர்ந்த ஆசாரி தியாகு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அட்சய திரிதி என்பதால் குறைந்த விலையில் அதாவது கிராமிற்கு ரூ400 விதம் குறைவாக தங்க வாங்கி தருவதாக கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய நகைக்கடை வியாபாரி முருகன், ஆசாரி மூலமாக வேதாரண்யத்தை சேர்ந்த பண்டேரிநாதன் என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பின்னர், அந்த நபர் சுமார் 2 கிலோ தங்கம் வாங்க ஏற்பாடு செய்து தருவதாக நகைக்கடை வியாபாரி ஏமாற்றி, 96 லட்சம் பேரம் பேசியுள்ளார். இந்த டீலிங்க்கை ஏற்றுக்கொண்டு கையில் பணத்துடன் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்திற்கு சென்றுள்ளார் நகைக்கடை வியாபாரி. அப்போது பண்டேரிநாதன் அவரிடமிருந்து பணத்தை வாங்கிகொண்டு, 850 கிராம் தங்கத்தை மட்டும் கொடுத்துள்ளார். பாக்கியை நாளைக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த தங்கத்தை பெற்று, தான் அழைத்து வந்த உதவியாளரிடம் கொடுத்து விட்டு, தனியே சென்றுள்ளார் நகைக்கடை வியாபாரி. அப்போழுது எதிர்பார்த்து காத்திருந்த அந்த கும்பல், அவரை மடக்கி பிடித்து மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீஸார் இந்த மோசடியில் தொடர்புடைய கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டேரிநாதன், கார் டிரைவர் திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த பாலகுமார், திருத்துறைப்பூண்டி எழிலுரைச் சேர்ந்த துர்காதேவி, கருப்பம்புலம் செல்லத்துரை, வடமழை மணக்காடு, தனுஷ்கொடி, திருத்துறைப்பூண்டி மணிமாறன் ஆகியோரைக் அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் இவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் தொடர்புடைய பலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், இலங்கையிலிருந்து வேதாரண்யத்திற்கு தங்கம் கடத்துவதும், கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் வந்தால் இலங்கையிலிருந்துவரும் கடத்தல் தங்கத்தைக் குறைந்த விலைக்கு வாங்கலாம் என்று பலர் வந்து ஏமாந்து விடுகின்றனர். இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு சிலர் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.