அதிர்ச்சி..! உயிரோடு இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நாடகமாடி கணவன் செய்த செயல்..
முதல் மனைவி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து உறவினர்களை நம்ப வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணம் முடித்த கையோடு மனைவியை மட்டும் இங்கு விட்டுவிட்டு, பாலகிருஷ்ணன் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் கடந்த வருடம் சொந்த ஊர் திரும்பிய நிலையில், கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லபடுகிறது.
தொடந்து கணவன் தன்னிடம் தினமும் ஏதாவது காரணம் சொல்லி தகராறு செய்வதாக கூறி, மனைவி மோனிஷா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் அங்கு தான் வசித்தும் வருகிறார்.
இதனிடையே மனைவி வெகு நாட்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததாலும், அவருடன் வாழ விருப்பம் இல்லாததாலும் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று பாலகிருஷ்ணன் ஆசைப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருமணமான விஷயம் தெரிந்தால் யாரும் பெண் தரமாட்டார்கள் என்று எண்ணிய பாலகிருஷ்ணன், தனது மனைவி மோனிஷா இறந்துவிட்டதாக கண்ணீர் போஸ்டர் ஒன்று தயார் செய்து, அதனை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களை நம்ப வைத்துள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தனது உறவுக்கார பெண் ஒருவரை 2 வது திருமணமும் செய்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே தான் இறந்து விட்டதாக தனது கணவர் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளங்களில் பார்த்த முதல் மனைவி மோனிஷா அதிர்ச்சியடைந்தார். மேலும் தனக்குத் தெரியாமல் தனது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டதை உறவினர்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மனைவி மோனிஷா, தன் கணவர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை ஏமாற்றிவிட்டு தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வடிவமைத்து நாடகாமாடி இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.
இதுக்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து, இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவன் இரண்டாது திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.