மகள் சடலத்தை தோளில் சுமந்தபடி 10 கி.மீ. நடந்த தந்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!
சிறுமியின் சடலத்தை தந்தை தூக்கிக் கொண்டு நடந்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
நபர் ஒருவர் தனது ஏழு வயது மகளின் உடலை தனது தோள் மீது வைத்து சாலையில் நடந்து செல்லும் பகீர் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இணையத்தில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சுகாதார துறை அமைச்சர் டி.எஸ். சிங் டியோ சம்பவம் குறித்த விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளிக் கிழமை காலை லக்கன்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதர மையத்தில் இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். மகள் இறந்த துயரத்தில் அமரர் ஊர்தி வரும் முன் தந்தை தனது உயிரிழந்த மகளின் உடலை தோளில் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
உயிரிழப்பு:
"கடந்த சில நாட்களாக காய்ச்சால் அவதிப்பட்டு வந்த நிலையில், அம்தாலா கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் தாஸ் தனது மகள் சுரேகாவை லக்கன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளி கிழமை அதிகாலை வேளையில் அழைத்து வந்தார். அங்கு வரும் பேதே சுரேகாவின் ஆக்சிஜன் அளவு 60-க்கும் குறைவாக இருந்தது. உடனடியாக சிகிச்சை துவங்கப்பட்ட நிலையிலும், காலை 7.30 மணி அளவில் சுரேகா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்," என ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த மருத்துவர் வினோத் பார்கவ் தெரிவித்தார்.
"அமரர் ஊர்தி சிறிது நேரத்தில் வந்து விடும் என நாங்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தோம். அமரர் ஊர்தி காலை 9.20 மணி அளவில் வந்தடைந்தது. ஆனால் அமரர் ஊர்தி வரும் முன்னரே அவர்கள் சிறுமியின் சடலத்துடன் அங்கிருந்து கிளம்பி விட்டனர்," என அவர் மேலும் தெரிவித்தார்.
விசாரணை:
வீடியோவின் படி ஈஸ்வர் தாஸ் தனது மகளின் சடலத்தை தனது தோள் மீது சுமந்த படி சுமார் பத்து கிலோமீட்டர்கள் வரை நடந்தே வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமியின் சடலத்தை தந்தை தூக்கிக் கொண்டு நடந்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அம்மாநில சுகாதார துறை அமைச்சர் டி.எஸ். சிங் டியோ, இந்த சம்பவம் பற்றி விரைந்து விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க அம்பிகாபூர் மாவட்ட மூத்த மருத்து மற்றும் சுகாதர துறை அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
"நான் அந்த வீடியோவை பார்த்தேன். அது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. சம்பவம் பற்றி முழு விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். பணி ஆணை பெற்று, அலுவல் நேரத்தில் பணி செய்ய முடியாதவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என நான் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறேன்," என அமைச்சர் சிங் டியோ தெரிவித்தார்.
"ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த அதிகாரிகள், குடும்பத்தாரை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அமரர் ஊர்தி வரும் வரை அவர்களை அங்கேயே காத்திருக்க கூற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காமல் அதிகாரிகள் தான் தடுத்திருக்க வேண்டும்," என்றும் அமைச்சர் கூறினார்.