பர்த்டே பார்டிக்கு சென்று வந்த சிறுமி... திடீர் உயிரிழப்பு... திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் கைது..!
புகாரின் படி பாதிக்கப்பட்ட சிறுமி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மகனின் பிறந்த நாள் பார்டிக்கு சென்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் நதியா மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்த நாள் பார்டி ஒன்றில் மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் அவர் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறி வருகின்றனர். இதுபற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டனர். பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரின் மகனை கைது செய்துள்ளனர்.
பிறந்த நாள் பார்டி:
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று புகார் அளித்தனர். புகாரின் படி பாதிக்கப்பட்ட சிறுமி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மகனின் பிறந்த நாள் பார்டிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு வரும் போதே சிறுமியின் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. பின் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மகன் வீட்டிற்கு பிறந்த நாள் பார்டிக்கு சென்று திரும்பிய எங்களின் மகளுக்கு இரத்த போக்கு ஏற்பட்டது. மேலும் அடிவயிற்று பகுதியில் அதிக வலி ஏற்படுவதாக தெரிவித்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தோம். எனினும், எங்களின் மகள் அதற்குள் உயிரிழந்து விட்டாள்."
கூட்டு பாலியல் வன்கொடுமை:
"நடந்த அனைத்து சம்பவங்கள், பார்டியில் பங்கேற்றவர்களிடம் இருந்து பேச்சுவார்த்தை மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எங்களின் மகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் மற்றும் அவனின் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என உறுதியாக கூற முடியும்," என உயிரிழந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதவிர இறப்பு சான்றிதழ் வழங்கும் முன்பே சிலர் வந்து வலுக்கட்டாயமாக எங்களது மகளின் சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கடும் நடவடிக்கை:
"இந்த சம்பவத்தில் எந்த விதமான அரசியலுக்கும் இடம்தர கூடாது. முறையான விசாரணை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீஸ் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும்," என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சருமான சாஷி பஞ்சா தெரிவித்தார். இத்துடன் மைனர் சிரார் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களை ஆளும் கட்சி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என அவர் தெரிவித்தார்.